Saturday, April 7, 2012

கறுப்பு வெள்ளை கலையழகு


“காலை 9.45 மணிக்குச் சரியாக வந்துவிடுங்கள். உங்களுடன் ஒரு 15 அல்லது 20 நிமிடங்கள்தான் பேசமுடியும்” –  இலக்கியம் என்கிற மழைக்காட்டில் சதா சர்வகாலமும் கவிதைத் தவம் இருக்கிற, நம் காலத்துக் கவிஞர் வைரமுத்துவின் சற்றே அவசரமான அந்த வேண்டுகோளால் புறப்பாட்டை வேகப்படுத்தினேன். 

என் மனவேகத்துக்கு ஈடுகொடுத்து நகர்ந்த பல்லவன் பேருந்து, 9.30 மணிக்கெல்லாம் கோடம்பாக்கத்து வெள்ளை மாளிகையில் என்னைக் கொண்டுபோய்விட்டது. அதுதான் கவிப்பேரரசின் வாசஸ்தலம்! மாளிகைக்குள் செல்வதற்கான வாசலும் அலுவலக நுழைவாயிலும் இரு வேறு திசைகளில் அமைந்திருக்கிறது போலும்! கவிஞரின் உதவியாளர்களான இளைஞர்கள் இருவர் என்னை உள்ளே அழைத்துச் சென்று அமரவைத்தார்கள். அந்தக் கட்டடத்தைப் பார்த்த மாத்திரத்தில் அமெரிக்க அதிபர்கள் தமது ஆட்சிக் காலம் வரையில் கொலைவெறியோடு அலைந்த, அலைந்துகொண்டிருக்கும் வெள்ளை மாளிகையை நினைவுபடுத்தினாலும், உள் நுழைந்ததும் சாண்டில்யன் நாவல்களில் கம்பீரம் காட்டிய அரண்மனைகளிலில் ஒன்று, என் மனக்கண்ணில் ஒளி பதித்து ஓவியமானது. வாயிலைத் திறந்ததும் கீழ்நோக்கி ஓடிய ஐந்தாறு படிக்கட்டுகள்… தரை மட்டத்தில் என்னைத் தரிக்க வைத்து வியப்பூட்டின. தமிழ் நாட்டிற்கே பஞ்சமான சுத்தம் அங்குதான் கொட்டிக் கிடந்தது. நாற்காலிகள் உள்ளிட்ட தளபாடங்கள் நவீனமும் மிடுக்கும் கலந்து காட்சியளித்தாலும், ஏனோ நான் சாண்டில்யனின் புராதன அரண்மனைகளுக்குள் தான் ஓடியோடி வெளிவந்துகொண்டிருந்தேன். ஒரு சுற்று முடிப்பதற்குள்ளாகவே மெல்லிய சத்தத்துடன் அகலத் திறந்தது எனக்கு முன்னிருந்த அகன்ற கதவு.

வெள்ளையல்லாத வேறு வண்ண உடையில் கவிப்பேரரசை யாரும் தமிழ்நாட்டில் கண்டிருக்க மாட்டார்கள் என்பதால் மட்டுமன்றி, அவர் என்ன வண்ணத்தில் உடையணிந்தால் எமக்கென்ன என்பதாலும் அதுபற்றி இங்கு குறிப்பிட எண்ணவில்லை. எனினும், அதைத் தவிர்க்க முடியவில்லை இங்கு! 
கவிஞர் தோன்றிய காட்சியிலிருந்து, மண்ணின் நிறத்து மரச் சுவர்களின் பின்னணியில் வெள்ளை நிறத்துக்கு அழகு அதிகம் என்று அன்று கண்டேன். அதிலும் வானிஷ் அடிக்கப்பட்ட, அந்த மரச் சுவர்களுடன் கவியரசு பிரவேசிப்பதற்கு முன்னரே நட்புறவாடியிருந்தேன்.

வணக்கம் சொன்னவாறு படிக்கட்டுகளில் இறங்கி, அவர் தரைதொட்ட தோரணை, என்னை மீண்டும் சாண்டில்யனின் அரண்மனைக்குள் தள்ளிவிடப் பார்த்தது. நல்லவேளை, அந்த நட்புச் சுவர்களே என்னை நடப்புலகில் நிலைத்திருக்க உதவின. 

நேரம் சரியாக 9.45 மணி. கலைஞர்களும் கவிஞர்களும் கவனிக்கவேண்டிய விடயம் இது! 15 நிமிடம் முன்னதாகச் சென்றதால், எனது அடுத்த நகர்வுக்குத் தேவையான பொருட்களைச் சரிபார்க்கவும் தேநீர் உபசரணையை ஏற்றுக்கொள்ள அவகாசமும் இருந்தது. எல்லாமே சரியாக இருப்பதாய்ப் பட்டதால்தான் மரச் சுவர்களின் அழகில் மயங்கயிருந்தேன். அன்றும் எனக்கு 12.30 மணிக்குப் பரீட்சைதான்! பேட்டியை முடித்துவிட்டு அங்கிருந்தே பரீட்சைக்குச் செல்வதாய் திட்டம். 

கவிஞருக்;குப் பதில் வணக்கம் சொன்ன என் கைகள், பேட்டிக்காகக் குறித்துவந்த கேள்வித் தாளைத் தேடியது. காணவில்லை. எனக்கு அதிகபட்சமாக ஒதுக்கப்பட்டிருந்த, குறைந்தபட்ச நேரமான 20 நிமிடங்களில், பையைத் துளாவியே இரண்டு நிமிடங்களைக் கழித்தேன். சக்.. சக்.. என்று பையிலிருந்த எல்லா ~pப்புகளையும் திறந்து பார்;த்தாயிற்று. ம்ஹ_ம்..!

“எதையாவது தவறவிட்டுவிட்டீர்களா?” என்றார். “ஆம் கேள்விகளை… ஆனால் பேட்டியை ஆரம்பிக்கலாம்” என்றபடி ரெக்கோடரை இயக்கினேன். மீடியாக்களிலும் மேடைகளிலும் கவிதைகளை முழங்கிய கவிஞரின் கணீர்க் குரல், இயல்புக்கு இறங்கி வந்து பதிலளித்தபோது, தன் இரு மருங்கிலும் பசும் புற்களை வளர்த்துக்கொண்டே சலனமற்றுப் பாயும்  ஒரு நதியின் பிரவாகம் கண்டேன். 

“கவிதை தொழிலாகவேண்டும்;, அதாவது கவிதை எனக்குத் தொழில் என்கிற நிலை கவிஞர்களுக்கு உருவாகவேண்டும்” என்கிற அவருடைய ஆதங்கம் பதிவானது. அரசவைக் கவிஞர்களாக இருந்தவர்கள் பட்டியலிடப்பட்டார்கள். தற்காலப் பெண் கவிஞர்கள் புகழப்பட்டார்கள். கண்ணதாசன் இல்லையேல் தான் இல்லை என்று உள்ளம் ஒப்பினார்.

எந்தவொரு தரப்போடும் முரண்டுபிடிக்காத சமரசத்துடன், ஆனால் சுவாரஸ்யம் மிகுதிப்பட தொடர்ந்த அந்த உரையாடல், முடிவுக்கு வந்தபோது, நேரம் சரியாக 10.53 மணி. வழமையான எனது கடைசிக் கேள்வி: “பேட்டி திருப்தியாக இருக்கிறதா?”. “நிச்சயமாக… உண்மைகளை வலிக்காமல் வாங்கிவிட்டீர்கள்” என்றார். “கொஞ்சம் தேநீர் நிறைய வானம்” என்ற கவிதை நூலில் கையெழுத்திட்டு வழங்கினார்.

வாசனைத் தமிழை வாசித்து வாசித்து அவன் 
தன்னை வசப்படுத்திக்கொண்டான். 
தாங்கள் வசிப்பதற்குத் தக்க நிலம் இவனென்று
வார்த்தைகள் அவனுக்குள் வசிக்கத் தொடங்கின! 

என்கிற  கவிதை வரிகள் இடம்பெற்றுள்ள இடம் குறித்து விளக்குக. அன்று நடந்த பரீட்சையில் இப்படியொரு கேள்வி!

நூல்: கவிராஜன் கதை 
ஆசிரியர்: வைரமுத்து
விளக்கம்: தமிழை தன்வசப்படுத்தி வைத்துக்கொண்டு கவிதை முழக்கமிட்ட புரட்சிக் கவிஞன் பாரதியை ‘கவிராஜன்’ என்று குறிப்பிட்டு, அவருடைய ஆளுமையை எடுத்தியம்ப, தமிழைத் தனக்குள் செழிக்கவைத்துக் கோலோச்சும் கவிப்பேரரசு வைரமுத்துவால் எழுதப்பட்ட “கவிராஜன் கதை” என்கிற நூலில் இந்த வரிகள் இடம்பெற்றுள்ளன என்று அன்று பதில் எழுதினேன்.

2005 ஆம் ஆண்டில் நான் பெரிதும் மதித்துப் பேட்டிகண்ட கவிப்பேரரசரின் அன்றைய ஆதங்கம், அடுத்து ஆட்சிக்கு வந்த திமுக அரசுக் காலத்தில் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டு அரசவைக் கவிஞர்களின் பட்டியலில் அவரும் இடம்பெற்றார். ஆனால் நிலைத்திருக்கவேண்டிய பெருமளவு வாசகர்ஃரசிகர்களின் மனதிலிருந்து நீக்கப்பட்டார். கொடுங்கோலை செங்கோலென்று புகழ்ந்து தள்ளிய இடங்களில், தமிழ் மொழியே அவருடன் முரண்டு பிடித்திருக்கக்கூடும்! சாண்டில்யனின் பழைய அரண்மனைகளில், என்னால் உருவாக்கப்பட்ட புதிய கதாபாத்திரம் இவர்!

Friday, January 14, 2011

தற்காலிகப் புகலிடத்தில் நிரந்தரமாக வாழ முடிவு!

ராஜா மகள்

வன்னிவாழ் தமிழ் மக்களின் வாழ்க்கையை எடுத்துச்சொல்ல எந்தவொரு  வார்த்தையிலிருந்து இக்கட்டுரையை ஆரம்பித்தாலும் இறுதியில் அழுகையில் முடிவதைத் தவிர்க்க முடியாது. ஒட்டுமொத்த உலகிலும்; நிகழ்ந்த, நிகழ்ந்துகொண்டிருக்கிற மனித அவலங்களின் வகையறாக்களைப் பட்டியலிடுவதாயின், அளக்க முடியாத அதன் நீளத்தின் இறுதி வரைக்கும் இன்று இவர்கள் படுகிற இன்னல்கள் இடம்பிடிக்கும்.

கேட்பதற்குச் சற்றே ஆச்சரியம் தருகிற விடயமானாலும்கூட நம்பியாக வேண்டிய நிஜம் இது! போரினால் நிர்க்கதியான மக்கள் பிளாஸ்டிக் கூரைகளின் கீழ் தங்கவைக்கப்பட்டனர். அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் வெயிலிலும் மழையிலும் அவர்கள் அல்லாடிய நிலை தொடர் சர்ச்சைக்குள்ளாகி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. “எங்களை எங்கள் இடங்களுக்குச் செல்ல அனுமதியுங்கள்” என்கிற கோரிக்கையை மட்டும் மக்கள் துணிச்சலாக அரசாங்கத்திடமும் ஐரோப்பிய மற்றும் அண்டை நாடுகளிலிலிருந்து வந்துபோவோரிடமும் கேட்டுக்கொண்டிருந்தனர். தற்போது குறித்த சில முகாம் மக்களுக்கு மட்டும் அதற்கு வழி பிறந்திருக்கிறது. ஆனாலும் அவர்கள் தமது சொந்த இடங்களில் குடியேற விரும்பவில்லை. எந்த முகாம் வாழ்க்கை வேண்டாம் என்று முன்பு அழுதார்களோ, இப்போது “அதுவே பரவாயில்லை, நாங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பவில்லை” என்கிற மனோ நிலைக்கு இலங்கை அரசாங்கம் அவர்களைக் கொண்டுவந்து விட்டிருக்கிறது. இதற்கான தலையாய காரணங்களைப் பட்டியலிடுவதோடு பிளாஸ்டிக் கூரைகளின் கீழ் மக்கள் படுகிற இன்னல்களையும் ஆராய்கிற இக்கட்டுரையை முழுவதுமாகப் படிப்பீர்களானால் பெரியதொரு சம்மட்டி கொண்டு உச்சந்தலையில் யாரோ அடிப்பதாய் உணர்வீர்கள்
.
1. இராணுவம் நிகழ்த்துகிற பாலியல் வன்புணர்வும் கொலையும்

வன்னியில் அரை கிலோ மீற்றருக்கு ஒரு காவலரண் அமைத்துத் தங்கியிருக்கிற இராணுவத்தின் பொழுதுபோக்கு, ஆண்கள் இல்லாத குடும்பங்களிலுள்ள பெண்களைப் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்துதலாகும். யாழ் அரசினர் வைத்தியசாலை உட்பட வட்டக்கச்சி துணுக்காய் போன்ற இடங்களில் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட பின்னர் கொலைசெய்யப்பட்ட, தற்போது வரையில் கொலைசெய்யப்பட்டுக்கொண்டிருக்கிற சம்பவங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். போர் நடந்தேறிய வன்னியின் பெரும்பாலான இடங்களில் முன்பு போன்று மக்கள் அடர்த்தியாக இல்லை. ஏக்கர் அளவில் விஸ்தீரணம் கொண்ட குடியிருப்பு நிலங்கள் தற்போது மயானம் போன்றுதான் காட்சியளிக்கிறது. அண்டை அயலாருக்குப் பதிலாக சீருடை அணிந்த இராணுவத்தை மட்டுமே பார்க்க முடிகிற அந்தச் சூழலில் மக்கள் குறிப்பாகப் பெண்கள் புதிதாகக் குடியேறுவதற்கு அஞ்சுகிறார்கள். 


2. குடிமகன்களாகி விட்ட குடும்பத் தலைவர்கள்

முகாம் வாழ்க்கையினால் ஏற்பட்ட மன விரக்தி குடும்பத்திலுள்ள பெரும்பாலான ஆண்களை குடிப்பழக்கத்துக்கு உள்ளாக்கிவிட்டிருக்கிறது. தவிரவும் முகாம்களைவிட்டு வெளியே வந்து குடியேறுபவர்களுக்கு இராணுவம் சாராயம் காய்ச்ச அனுமதி வழங்குகிறது. இராணுவமும் மக்களும் கூடிக் குடித்து மகிழ்கிற நாளாந்த விழாக்களாக இப்பழக்கம் மாறிவிட்டிருக்கிறது. இதில் இராணுவத்துக்குள்ள சாதக நிலைமைக்கு முற்றிலும் எதிரானது, சாராயம் காய்ச்சுபவர்களின் நிலை. இதில் அவர்களுக்குப் பெரிய லாபமொன்றும் இல்லை. ஆனால் அவர்கள் மொடாக் குடிகாரர்களாகிவிட்டார்கள். புதிதாகப் பரவி வருகிற இப்போதைப் பழக்கத்துக்குப் பெரும்பாலான ஆண்கள் அடிமைகளாகி விட்டமை கொடுமையே! இவ்வாறு குடித்துவிட்டுத் தன்னிலை மறந்திருக்கிற தம் குடும்பத்து ஆண்களால் தமக்குப் பாதுகாப்பு வழங்க முடியாது என்பது பெண்களின் கணிப்பு! இதனால் தம்முடைய இடங்களுக்குச் செல்வதைவிட மக்கள் நெருக்கமாக உள்ள முகாம்கள்தான்; தமக்குப் பாதுகாப்பு என்று பெண்கள் கருதுகின்றனர். 

3. வீடமைப்பதற்கான நிதி வழங்கும் முறை

பாதிப்புற்ற ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீடு கட்டிக் கொடுப்பதற்கு முன்வந்த நாடுகளிடமிருந்து இலங்கை அரசாங்கம் தாராளமாக நிதியினைப் பெற்றுக்கொண்டது. ஆனால் ரூபா 25,000/=  என்கிற அடிப்படையில் ஆரம்பித்து கட்டம் கட்டமாக அவற்றை வழங்கிவருவதால் குடிப்பழக்க-முள்ளவர்கள் அப்பணத்தைக் கொண்டு தமது குடியிருப்பிடங்களை அமைப்பதற்குப் பதிலாக குடித்தே முடித்துவிடுகின்றனர். அல்லது வேறு செலவுகள் செய்து தொலைக்கிறார்கள். 

4. உடல் பலவீனம் அல்லது வேலை செய்ய விரும்பாமை

சுமார் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக முகாம்களுக்குள் முடங்கியிருந்துகொண்டு வயிற்றை நிறைப்பதற்கு மட்டும், போஷாக்கின்றிச் சாப்பிட்டுப் பழகிவிட்ட ஆண்களால் இப்போது எந்த வேலையும் செய்ய முடியவில்லை அல்லது அவர்கள் விரும்பவில்லை.  முகாமில் கிடைக்கிற முக்கிய உணவுப்பொருட்களான அரிசி, மா, சீனி, பருப்பு ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடில்லாததால் கறி சமைப்பதற்கு மட்டுமே அவர்கள் எதையாவது தேட வேண்டியிருக்கிறது. வெளிநாடுகளில் உள்ள உறவினர்களிடம் இருந்து பணம் வருமாயின் இதுவும் இவர்களுக்கு இலகுவாக அமைந்துவிடுகிறது. பிள்ளைகளுக்குப் பாடசாலை வசதிகள் இன்னமும் செய்து தரப்படவில்லை. ஆக பள்ளிச் செலவும் இல்லை. ஏன் தமது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த எந்தவொரு கனவு அல்லது எதிர்பார்ப்பு கூட பெற்றோர்களுக்கு இருப்பதாய்த் தெரியவில்லை. ஆக தாங்கள் எதற்கு வேலை செய்ய வேண்டும் என்கிற கேள்வியை எம்மிடமே கேட்கிறார்கள்.

முகாம் வாழ்க்கையைப் போரின் எச்சமாக எடுத்துக்கொண்டாலும் தொடர்ந்து பிளாஸ்டிக் கூரைகளின் கீழ் வாழ்வதற்கு எவ்வளவு சகிப்புத் தன்மையைக் கொண்டிருக்க வேண்டும் என்று எம்மை அதிர வைக்கிறார்கள் இந்த மக்கள். அவர்களுக்கு என்ன சொல்லி நம்பிக்கையை வரவழைப்பது என்று நாம் சிந்திப்பதற்கே அங்கு அவகாசமில்லை.

மரங்கள் இல்லாத வெட்டவெளி, அதில் அடிக்கிற அனல் காற்று, மழை வெள்ளம், பனி, ஆபத்தான ஜந்துகள் என அனைத்தையும் தாங்குவதற்குத் தாங்கள் தயார். ஆனால் தனியாக இருப்பதற்குப் பயமாக இருக்கிறது என்று கூறிக் கண்ணீர் வடிக்கிற மக்களின் குறிப்பாகப் பெண்களின் முகங்களைப் பார்த்தால்.... (இங்கே எனக்கு எந்த வார்த்தையும் வரவில்லை)

பிளாஸ்டிக் கூரைகளின் கீழ் மக்கள் படும் அவலம் 

இடம்பெயரநேர்கிற மக்களுக்கான முதன்மைத் தேவை, புகலிடம் வழங்குவதுதான் என்கிற மனிதநேயம் குறித்து எந்தவொரு நாடும் இரண்டாவது கருத்தைக் கொண்டிருப்பதில்லை. ஏதாவதொரு நாட்டில், மக்கள் உடமைகளையும், உயிர்களையும் இழந்து நிர்க்கதியாகி நிற்கிறபோது, அவர்களுக்குப் புகலிடம் வழங்குவது எவ்வாறென்று அந்நாட்டு அரசாங்கம் முடிவெடுப்பதற்குள்ளாகவே, உதவி வழங்குகிற அல்லது நன்கொடை வழங்குகிற ஏதாவது ஒரு நிறுவனமோ அல்லது பலவோ பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு பிளாஸ்டிக் கூரைகளை(Tents) உடனடியாக அனுப்பி உதவிவிடு கின்றன.  இது தற்காலிகமானதொரு புகலிட வசதிதான். இதன் அடுத்த கட்டம் என்ன?

மனித உயிர்களால் இந்தப் பிளாஸ்டிக் கூரைகளை எவ்வளவு காலத்திற்குத் தாக்குப் பிடிக்க முடியும்? என்கிற கேள்விகளுக்கு விடைதேடுமுகமாகவும் பிளாஸ்டிக் கூடாரங்களுக்குள் வானிலை, காலநிலை ஆகிய காரணிகள் செலுத்தும் தாக்கம், கூடாரங்களுக்குள் குலைந்துபோகக்கூடிய கலாசாரம் மற்றும் பண்பாடு, குறுகலான இடப்பரப்பில் முதியோர், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் படுகின்ற அவலங்கள், சுகாதாரக் குறைபாடுகள் ஆகிய விடயங்கள் குறித்து இங்கே என்  சிந்தனையைத் திருப்புகிறேன்.

பிளாஸ்டிக் கூடாரங்களின் தேவை இடம்பெயர்கிற, இடம்பெயராத இருசாராருக்கும் பொதுவானவை ஆனாலும் அவற்றின் வகைகள் பல்வகைப்பட்டவை! போர், இயற்கை அனர்த்தம் முதலிய திடீர்க் காரணங்களினால் மக்கள் இடம்பெயர நேர்கிறபோது, ஐக்கிய நாடுகளின் ஏதாவதொரு நிறுவனம்(UNO) அல்லது ஏதோவொரு சர்வதேச நிறுவனம்(International Non-governmental Organization) அல்லது நன்கொடை வழங்குகிற நிறுவனங்களிலொன்று(Donor Organization) அல்லது அரசசார்பற்ற நிறுவனமொன்று (Non-Goverenmental Organization) அல்லது எல்லாமே இணைந்து பிளாஸ்டிக் கூரைகளை வழங்கி புகலிடங்களை அமைப்பதற்கு உதவுகின்றன.

இவற்றில் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையகத்தின்(UNHCR) பிளாஸ்டிக் கூரைதான் சர்வதேச அங்கீகாரம் பெற்ற தரமானதென்று கொள்ளப்படுகிறது.

ஆராய்ச்சியாளர்கள், உல்லாசப் பயணிகள், பாதயாத்திரை செல்வோர், களியாட்டங்களில் ஈடுபடுவோர், குழந்தைகள், பாதுகாப்புப் படைவீரர்கள் ஆகிய வகையினர் பிளாஸ்டிக் கூரையைப் பயன்படுத்துகிற இடம்பெயராதவர்கள். இவர்களுக்கான கூரைகளை மேற்சொன்ன நிறுவனங்களல்லாத வேறு நிறுவனங்கள் வௌ;வேறு தரங்களிலும், பல்வேறு வசதிகளுடனும் உற்பத்தி செய்கின்றன.

UNHCR ஸ்தாபிக்கப்பட்ட காலத்திலிருந்தே அகதிகளுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிற பிரதானமான உதவி நடவடிக்கை, புகலிடங்களுக்கான பிளாஸ்டிக் கூரைகளை வழங்குவதாகும். அனைத்தையும் இழந்து அவலத்துக்குள்ளாகிற மக்களுக்கு UNHCR செய்கின்ற மேன்மையான இந்தப் பௌதீக உதவி மூலம் மக்களை உளவியல் ரீதியான பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ள முடிகிறது.

ஆனால் இவ்வாறு புகலிடங்களுக்குள் தஞ்சமடைகிற மக்கள், இது தாம் குடியிருப்பதற்கு உகந்ததல்லவென்பதை அடுத்தடுத்த நாட்களிலேயே அனுபவித்தறிந்து விடுகிறார்கள். காரணம், மிகக் குறைந்த உயரம் கொண்ட ஒருசில தடிகளைக் கொண்டுதான் இப்புகலிடங்கள் அமைத்துக் கொடுக்கப்படுகின்றன.

உண்மையில் புகலிடங்கள் குறைந்தபட்சமாக, சீரான தட்ப வெப்பத்தில் தூங்குவதற்குப் போதிய இடப்பரப்பையும் ஆடைகளைப் பேணக்கூடிய இட வசதியையும் கொண்டிருக்க வேண்டும்.  வெப்பம் நிலவுகின்ற நாடான இலங்கையில், உயரம் குறைவான கூடாரங்களில் இவற்றிலொன்றைத்தானும் பெறமுடியாத மக்கள் கூடாரங்களுக்கு வெளியே தான் தூங்குகிறார்கள்.

நீர் புகாத, வெப்பம் உள் உறிஞ்சப்படாத, காற்று உள்வரக்கூடிய, புகை வெளியேறக்கூடிய, தீப்பற்றமுடியாத வசதிகளோடெல்லாம் பிளாஸ்டிக் கூரைகள் தயாரிக்கப்பட்டாலும், ஆசிய நாடுகளில் அதிலும் குறிப்பாக இலங்கையில் பெருந்தொகையான மக்கள் தொடர்ந்து பாதிப்புகளுக்குள்ளாகி வருவதாலோ என்னவோ எளிதில் தீப்பற்ற முடியாததும், நீர் புகமுடியாததுமான வசதியை மட்டுமே கொண்டிருக்கிற பிளாஸ்டிக் கூரைகளே வழங்கப்படுகின்றன.

இப்புகலிடக் கூரைகள் நகர்த்தப்படக்கூடியவை என்பதால், அதன் வழங்குனர்களுக்கும் பெறுவோரான மக்களுக்கும் பெருத்த வசதியளிப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், காலநீட்சியைப் பொறுத்தும் காலநிலை குறித்தும் சிந்திப்போமானால், ஒற்றைக் கம்பத்தில் அமைக்கப்படுகிற இந்தக் கூரைகள் மட்டுமே புகலிடம் என்கிற வரைவுக்குப் பொருந்துமா என்பது கேள்விக்குரியது. அதிலும் தற்காலிகத்துக்காகக் கொடுக்கப்பட்ட அவற்றின் கீழ் வேறு நாதியின்றி அவர்கள் நிரந்தரமாக வாழ முடிவு செய்துள்ளமை கொடுமையல்லவா?   

Tuesday, January 4, 2011

தலை நகரில் நடந்த கறிவேப்பிலைப் புரட்சி!

ராஜா மகள்

இலங்கையின் தலைநகரில் தமிழர்களின் கோட்டை என்று பெரும்பான்மை யினத்தவரால் பொறாமையுடன் வர்ணிக்கப்பட்டு, அங்கு வாழ்கிற நம்மவர்களால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட இடம் கடற்கரைத் தோட்டம். அதன் விசித்திரத்தை விளம்புகிற இந்த எழுத்து வடிவம், தற்போதைய பரபரப்பு ஓட்டங்களுக்கிடையில் சோகங்களும் சுவாரஸ்யங்களும் மிகுந்து கடந்துபோன உங்கள் தலைநகர வாழ்க்கையை குறைந்தது பத்து நிமிட நேரமாவது நிற்க வைத்து நினைவு மீட்டும் என்று நம்புகிறேன். தலைநகரில் வாழநேர்ந்த தமிழர்கள் தம் வாழிடத் தேர்வுக்காய் கடற்கரைத் தோட்டத்தைத் தேர்ந்தெடுத்ததில் மட்டும் முரண்படாமல் ஒற்றுமை கொண்டிருந்தார்கள் என்பதற்கு நான் கூறும் விளக்கம் குறித்து உங்களுக்கு இரண்டாவது கருத்து இருக்காது என்பதும்கூட என் நம்பிக்கை. இருந்தாலும் ஒன்றும் தவறில்லை. கீழுள்ள மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்.

நடைபாதையின் ஒரு புள்ளியில் நிகழ்ந்த மிகச் சாதாரண சம்பவம் அல்லது நிகழ்வு நம் மொத்த வாழ்க்கையையே சில வேளை புரட்டிப் போட்டுவிட்டு மூச்சு வாங்கியிருக்கிறது. இங்கு என் தலைப்பு குறிப்பிடும் விடயத்திலும் நடைபாதை உண்டு. முழுவதையும் வாசிக்கத் தீர்மானித்து விட்டீர்களானால், முடிவுறும் வரையிலும் ‘தில்லானா மோகனாம்பாள்’ திரைப்படத்தில் நடிகை பத்மினி அபிநயித்த நவரசங்களும் உங்கள் திருமுகங்களில் தோன்றிக் கொண்டேயிருக்கும். வேண்டுமானால் யாரையாவது மறைந்திருந்து பார்க்கச் சொல்லி, வாசிக்கத் தொடங்குங்கள்.

இலங்கையின் தலைநகரில் பல பத்து வருடங்களாக தமிழர்கள் மிக நெருக்கமாக வாழ நேர்ந்த அல்லது வாழ விரும்பிய இடம் கடற்கரைத் தோட்டம். 1983 களுக்கு முன்னர் தமிழர்கள் தலைநகரில் வசிப்பதற்கு அரசாங்க உத்தியோகமே பெருத்த காரணமாயிருந்தது. வர்த்தகமும் தனியார் நிறுவனப் பணிகளும் கூட இதர காரணங்களெனினும் இவை வெகு குறைவே! எனவே எம்மவர்களின் வசிப்பிடங்கள் அப்போது கடற்கரைத் தோட்டத்தை மட்டும் குறிவைக்காமல், அவரவர் பணியிடங்களைப் பொறுத்துத் தலைநகரெங்கும் பரவியிருந்தது. இவர்களின் அளவான மாதச் சம்பளத்தையோ அல்லது வருமானத்தையோ தெற்கில் அப்போது வீசிய சோளகம் ஒருபோதும் அடித்துக்கொண்டு போனதில்லை. ஏனெனில் அவர்களுடைய கையிருப்பின் அளவு, வாழ்வின் அழகோடு ஒட்டிக்கொண்டிருந்தது.

85 களுக்குப் பிறகு, ஓரளவு பண வசதி இருந்த வட பகுதிக் குடும்பங்கள் பிள்ளைகளைத் தலைநகரில் படிக்க வைக்க விரும்பினர். அதிக பணம் இருந்தவர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தனர். இது படிப்படியாக அதிகரித்து, 90 களை அண்டிய முன்னும் பின்னும் தெற்கு நோக்கிய தமிழர்களின் வரவை அதி வேகப்படுத்தியது.

வெளிநாடு போகிற உறவுகளை வழியனுப்ப, அல்லது ஏற்கனவே போனவர்களிடம் குசலம் விசாரித்து பண உதவி பெற, பிள்ளைகளைப் படிக்க வைக்க, படித்துக்கொண்டுள்ள பிள்ளையைப் பார்க்க அல்லது அவர்களுடன் சில காலமோ நிரந்தரமாகவோ தங்கியிருக்கவென வடக்கிலிருந்து தெற்கு நோக்கி சாரிசாரியாக மக்கள் வரத் தொடங்கினர். வருடமொன்றினை இலக்குவைத்து இத் தேவைகளுக்காகத் தெற்குக்கு வந்த மொத்தப்பேரையும் கணக்கிட்டால் இவர்களுக்குக் குறைவில்லாமல் அல்லது இணையான தொகையில் வெளிநாட்டு மாப்பிள்ளைகளுக்காக அனுப்பப்படுவதற்காகத் தலைநகரில் தங்கியிருந்த வடபகுதிப் பெண்களைக் குறிப்பிடலாம். இவர்கள் தலைநகரின் மற்றைய இடங்களைவிட கடற்கரைத் தோட்டத்தில்தான் அதிகமாகத் தங்கியிருந்தனர். இருக்கின்றனர். இதற்கான முக்கிய காரணங்களாகப் பின்வரும் நான்கு விடயங்களைக் குறிப்பிடலாம்.

1. மொழிச் சிக்கல் மிகக் குறைவாக இருந்தது

தலைநகரின் மற்றைய இடங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ் பேசக்கூடியவர்கள் இங்கு அதிகமாயிருந்தார்கள். அவர்களுள் அரசாங்க உத்தியோக நிமித்தம் 1983 களுக்கு முன்னரே அங்கு வந்துவிட்ட நம்மவர்களையும் அயலவர்களாக அவர்களிடமிருந்து தமிழ் கற்றிருந்த சிங்களவர்களையும் மற்றும் முஸ்லிம்களையும் குறிப்பிடலாம். மொழி குறித்த இந்த ஆரோக்கிய நிலைமை வடபகுதியிலிருந்து புதிதாக வருகின்ற எம்மவர்கள் இங்கே இலகுவில் வாடகைக்கு வீடு பிடிப்பதற்கு வசதி செய்தது.

2. பொழுதுபோக்கும் பிரார்த்தனையிடங்களும்

தமிழர்களின் சடங்குகள் சம்பிரதாயங்களை மட்டுமின்றி கலாசாரத்தையும் பேணிக் காக்கிற நிகழ்வுகளை அரங்கேற்றுகிற இடங்களாக இராமகிருஸ்ண மிஸனும் தலைநகரத் தமிழ்ச் சங்கமும் கடற்கரைத் தோட்டத்தில் அமைந்துள்ளன. இவ்வாறு கண்டு களித்த நிகழ்வுகள் பற்றி இவ்விடத்தின் கடற்கரையில் காற்று வாங்கியபடியே கதை பேசவும் அக்கதைகளிலிருந்து பிறக்கிற விவாதங்களை வைத்து ஹாஸ்யமாகக் கதைவிடவும் என எம்மவர்கள் ரசனையுடன் பொழுதுபோக்க முடிந்தது. தவிரவும் கடல் தவிர்ந்த மற்றைய மூன்று திசைகளிலும் பஸ்ஸில் பயணம் செய்தால், எல்லாவகையான இந்துக் கடவுளர்களையும் இலகுவில் தரிசிக்க முடியும். இப்போது கடற்கரையிலும்கூட ‘விசா பிள்ளையார்’ தோன்றிவிட்டார். இவரை வணங்கினால் வெளிநாடு செல்வதற்கு விசா பெறலாம் என்றும் பெற்றவர்கள் அதிகம் என்றும் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். சிலருக்கு ஒரேயடியாக மேலே செல்லவும் விசா கிடைத்திருக்கிறது.

3. நெரிசல் இல்லாத அமைதி நிலவியது

கடற்கரைத் தோட்டத்தின் பழைய தோற்றம், பெரிய அல்லது மிகப் பெரிய வர்த்தக நிலையங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை. கிராம சேவை, கிராமசபை, மின்சாரம், தண்ணீர் போன்றவற்றுக்கான அத்தியாவசிய பணிமனைகள் தவிர வேறு அரசாங்க அலுவலகங்;கள், திணைக்களங்களைக் கூட கொண்டிராத பகுதியாக அது இருந்தது. இதனால் வேலைக்காகவோ கொள்வனவுகளுக்காகவோ பிற இடத்து மக்கள் வந்து போகத் தேவையிருக்கவில்லை. இதனால் கடற்கரைத் தோட்டம் ஜன நெரிசல் இன்றி அமைதியாகவிருந்தது.

4. கடற்கரைத் தோட்டத்தின் கண்கொள்ளா அழகு

காரணம் கருதித்தான் இவ்விடத்திற்குப் பெயர் சூட்டப்பட்டிருக்கவேண்டும். பல மூலிகைச் செடிகளும் பழ மரங்களும் நிறைந்திருந்த இவ்விடத்தில் நச்சுத் தன்மையற்ற காட்டுப் பூக்களும் மலர்ந்து அழகு காட்டிக் கொண்டிருந்தது. அப்போது ஐந்து வீடுகளுக்கிடையில் ஒரு வெற்றுக் காணியாவது காணப்பட்டது. தவிரவும் அடுக்கு மாடிகளையோ தொடர்மாடிகளையோ கொண்டிராத பழைய கால ஓட்டு வீடுகள், பசுமையுடன் கூடியதோர் அழகைக் காட்டிக்கொண்டிருந்தன. எனவே திரும்பிய திசையெங்கும்; கட்டடங்கள் தெரிகிற இடங்களைவிட, பசுமை நிறைந்ததாய் வடக்கை ஒத்திருந்த கடற்கரைத் தோட்டச் சூழல் எம்மவர்களை அதிகமாகக் கவர்ந்தது.

ஆரம்பத்தில் தலைநகரில் இப்படியெல்லாம் குடியேறி வாழ்ந்த எம்மவர்களில் பெருமளவினரை 1983 ஜூலை கலவரத்தில் இழந்தோம். அல்லது எல்லாம் சூறையாடப்பட்டு விரட்டப்;பட, வடக்கில், எம்மிடத்தில் சந்தித்தோம். சிங்கவெறியாட்டின் மிக முக்கியமான காலப்பகுதியன்றோ இது!

1985 களுக்குப் பிறகு தலைநகரில் தமிழர்களைக் கண்டபோதெல்லாம் சிங்கள இனவாத அரக்கர்களுக்குப் பித்தம் தலைக்கேறியது. 1983 இல் முடிவுறாத அத்தியாயங்களை தனியாட்களாகவும் அரசாங்கமாகவும் வெறியாட்டத் தொடங்கினர். இதனால் சிங்களவர்கள் அடர்ந்து வாழ்ந்த பகுதிகளைப் பயந்து தவிர்த்த தமிழர்கள், தமிழர்கள் அல்லது தமிழ் பேசிய மக்கள் நிறைந்த பகுதிகளையே தம் வாழிடமாகத் தெரிந்தெடுத்தனர். ஆக கடற்கரைத் தோட்டம்தான் இதற்குச் சாலவும் பொருத்தமாயிருந்தது. அதுபோலவே புலிகளின் வெற்றிச் செய்திகள் கிட்டியபோதெல்லாம் தமிழர்கள் அதிகமாக இருக்குமிடங்களில் சிங்களவர்கள் வசிக்கப் பயந்தனர். தமிழர்களை வெறுத்தனர், தம் இருப்பிடங்களை மாற்றவும் செய்தனர்.

சிங்க வெறியாட்டின் சில்மஷங்களிலொன்றாய் வடக்கிலிருந்து தெற்கிற்கு வந்த தமிழர்கள் மட்டும் தம் இருப்பிடத்தைப் பொலிஸில் பதிவு செய்யவேண்டுமென்று சட்டம் கொண்டுவரப்பட்டது. பதிவு செய்திருந்தாலும்கூட காரணமின்றி இளைஞர் யுவதிகளைக் கைது செய்வது, கதை முடிப்பது என தாங்கள் கொண்டுவந்த சட்டத்துக்கு முரணாகவும் துர் சம்பவங்களைத் தொடர்ந்து நடத்தினர்.

சர்வதேசமும் சந்தித்துக்கொள்கிற தலைநகரில் கண்ணுக்குத் தெரியாமல் தமிழர்களின் கதை முடிப்பதில் சிறப்புத் தேர்ச்சிபெற்ற சிங்கள அரக்கர்கள் தம் பாவச் செயல்களைப் பல ரூபங்களில் நிகழ்த்திக்கொண்டிருந்தார்கள். தலைநகர் தவிர்ந்த தமிழர் பிரதேசமெங்கிலும் விமானத் தாக்குதல் மூலம் தமிழர்களின் உடலைச் சின்னாபின்னமாக்கி அழிக்கிற சிங்க வெறியாட்டு நடந்தது. இதனால் வடக்குவாழ் தமிழர்கள் தம் உயிர்களைக் காப்பதற்காக நாட்டைவிட்டு எங்காவது ஓடவேண்டியிருந்தது. இதற்காகத்தான் குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் மிகப் பெருமளவினர் தலைநகருக்கு வரவேண்டியது நிர்ப்பந்தமாகியது.

தலைநகரில் முறையான ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு விமானம் ஏறும் வரையில் தங்களுக்கு எதுவும் நடக்கலாம்! ஆனால் எது நடந்தாலும் தம் உறவும் சுற்றமும் அறியவேண்டும் என்று இயல்பாகவே தோன்றக்கூடிய மனித எண்ணம் ஒவ்வொரு தமிழர்களின்ன மனதிலும் தவிர்க்கமுடியாத எதிர்பார்ப்பாகியது. இதனால் ஏற்கனவே தமிழர்கள் விரும்பி வாழத் தொடங்கியிருந்த கடற்கரைத் தோட்டமே புதிதாக வருகின்ற பெரும்பாலானோருடையதும் இருப்பிடத் தெரிவாகியது. நிதர்சனமான இந்த நிஜங்களால் காலத்துக்குக் காலம் தமிழர்கள் கடற்கரைத் தோட்டத்தை நிறைக்க, சிங்களவர்களின் வருகையும் வசிப்பிடமும் அங்கு அருகத் தொடங்கியது. ஏற்கனவே இருந்தவர்களும் தம்மிடங்களை விற்றுவிட்டு வேறிடம் தேடிப் போயினர். இன்னொரு வகையில் குறிப்பிடின், வேகம் கண்ட தமிழர்களின் கடற்கரைத் தோட்ட வருகை, சிங்களவர்களை அங்கிருந்து படிப்படியாக வெளியேற வைத்ததெனலாம். 2009 ஆரம்பம் வரையில் வீதிக்கு ஐந்து சிங்கள வீடுகள்கூட கடற்கரைத் தோட்டத்தில் இருக்கவில்லை. முஸ்லிம்கள் ஓரளவில் வசித்தார்களானாலும் தமிழர்களே பெரும்பான்மையாயினர்.

ஆனால் வருடா வருடம் அங்கு அதிகரித்த தமிழ் மக்கள் தொகைக்கேற்ப வர்த்தக நிலையங்கள் உருவாகியிருக்கவில்லை. அல்லது அங்குள்ள மொத்தக் குடியிருப்பாளர்களின் கொள்வனவுத் தேவையைப் பாதியளவுகூடப் பூர்த்திசெய்ய முடியாதளவுக்கு ஒரு சில சில்லறைக் கடைகளே தோன்றியிருந்தன. சந்தைக்கென்றொரு கட்டடம் இருந்தது. ஆனால் அது சரியாக இயங்கவில்லை. இதனால் கடற்கரைத் தோட்டவாழ் தமிழ் மக்கள் சிறப்பான அல்லது மிகையான கொள்வனவுகளுக்காக, குறிப்பாக காய்கறிகள், பழவகைகள், மாமிச உணவுகள் போன்றவற்றுக்காக கோட்டைக்கோ அல்லது கிருலப்பனைக்கோ செல்லவேண்டியிருந்த நிலைமை 2001 வரையிலும் இருந்தது.

அங்கிருந்த சிங்கள வியாபாரிகள் பொருட்களின் தரத்தினைச் சரிபார்த்து வாங்குகிற தமிழர்களை உன்னிப்பாக அவதானித்தனர். வெற்றிலைக் கறை படிந்த தம் பற்களைக் காட்டி நாணியும் கோணியும் தமது வியாபாரத்தை நல்லபடி நடத்தினர்.
தலைநகர்வாழ் பெருமளவு முஸ்லிம்களின் பிரதான தொழில் வர்த்தகம். அவர்களுடைய வர்த்தக நிலையங்கள் கடற்கரைத் தோட்டம் தவிர்ந்த வேறு இடங்களில், கோட்டையிலோ அல்லது அதை அண்மித்த இடங்களிலோ இருந்ததால், அவர்கள், தம் நுகர்வுப் பொருட்களை அவ்வந்த இடங்களிலேயே மொத்தமாகக் கொள்வனவு செய்து திரும்பினார்கள். தவிரவும் இவர்களின் நுகர்ச்சி வீதம் அதிகம் என்பதாலும் அப்போதெல்லாம் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பெரும்பாலான பெண்கள் கடைகளுக்குச் செல்வதில்லையாதலாலும் கடற்கரைத் தோட்டத்தின் சில்லறைக் கடைகள் இவர்களுக்குத் தேவைப்படவேயில்லை.

சிங்களவர்களைப் பொறுத்தவரையில் வருமானத்தின் மிகையோ குறையோ அவர்களின் வாழ்க்கை முறையில் குறிப்பாக உணவுப் பழக்கத்தில் தாக்கம் செலுத்துவதில்லை. ஆடம்பரத்தின் எந்தவொரு கூறினையும் அறிந்திராத, அறிந்திருந்தாலும் கை வந்திராத இந்தச் சமூகத்திற்கு பாண், பருப்பு, பலாக்காய், கருவாட்டுடன் ஏதாவதொரு இலை வகை இருந்தால் போதும். அவையெல்லாம் கடற்கரைத் தோட்டத்திலேயே கிடைத்ததால் கொள்வனவுச் சிக்கல் எதுவும் இவர்களுக்கிருக்கவில்லை.
இலங்கையில் ஆட்சி மாற, காட்சிகளும் மாறிய காலம் 2001. ரணில் ஆட்சிப்பொறுப்பெற்று சர்வதேசங்களைச் சாட்சிக்கு வைத்து, தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனுடன் செய்துகொண்ட சமாதானப் பிரகடனத்துக்குப் பின்னர் கொழும்பு தெரியாமல், கொழும்புக்கு வராமல் இருப்பதை இழுக்கென்றுணர்ந்த எம்மவர்கள். குறிப்பாக இளைஞர்கள் சாரி சாரியாக தலைநகருக்கு வந்து போயினர். பிறந்ததிலிருந்தே ரயிலைக் கண்டிராத, தியேட்டரில் படம் பார்த்திராத பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்கள் எண்ணிறைந்தோர் தமது விருப்பத்தை இக்காலகட்டத்தில்தான் முதன் முறையாகப் பூர்த்தி செய்ததை நானறிவேன்.

2001 காலப்பகுதிக்கு முன்னர் வெளிநாடு போன பெரும்பாலானவர்களின் சொந்தங்கள் நீண்ட காலத்துக்குப் பின்னர் தலைநகர் வந்து முதன் முறையாக தொலைபேசியூடாக தம் பாசத்தைப் பரிமாறினர். இங்கு பாசப் பரிமாற்றத்தை விட பணத்துக்கான கோரிக்கைதான் முதன்மை என்கிற நிலை இருந்ததை மறுக்க முடியாது.

இவ்வாறு நீண்ட நெடுங்காலத்துக்கு பின்னர் வடக்கு-தெற்கு சுதந்திர போக்குவரத்தில் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டிருந்தனர் எம்மக்கள். ஆனால் பணப் புழக்கம் உள்ள நம்மவர்களைக் கண்டதும் சிங்களப் படைகளுக்கு கைது செய்கிற மேனியா வந்தது. அது பின்னர் தொற்றுநோயாகிப் படர்ந்து சிங்களவர்களின் பாவப் பட்டியலில் நிலைகொண்டது. தமிழர்களிடமிருந்த அசையும் சொத்தை வைத்து சிங்களவர்கள் தம் எதிர்காலத்தைக் கனவு கண்டார்கள்.

தமிழர்களை நசுக்குவதற்கான சிங்களச் சட்டங்களின்படி, தலைநகர்வாழ் தமிழர்கள் உரத்துத் தும்மக்கூட முடியாது என்கையில் தலைமறைவாகச் செலவு பண்ண முடியுமா என்ன! முடிந்தாலும்கூட எப்போதும் எங்களுடன் கூடிக் கும்மியடித்துக்கொண்டிருந்த, இருக்கிற எட்டப்பர்கள் விடுவார்களா?? சிங்கள அரக்கர்களிடம் தன் இனத்தையே காட்டிக்கொடுத்துக் கமிஷன் வாங்கி இன்றுவரையில் கேவலாகப் பிழைத்துக்கொண்டிருக்கிற இந்த ஜென்மங்கள் சிங்களவனுக்குச் சொல்லிக் கொடுத்த கெடுமதிகளின் வகைகளும் நீளமும்தான் இன்றுவரை, இப்படியெல்லாம் நாங்கள் சிங்களவனால் ஆளப்படுவதற்கு அத்தாட்சி.

தலைநகரில் தங்கியிருந்த, இருக்கிற எமது இனத்தின் ஒவ்வொரு இளைஞனுக்கும் யுவதிக்கும் “எப்போது வேண்டுமானாலும் நான் கைது செய்யப்படலாம்” என்கிற அச்சமும் அது ஏற்படுத்துகிற பலவீனமும் தவிர்க்க முடியாத சித்திரவதையாக இருந்தது, இருக்கிறது. “இதனால், இந்தச் சித்திர வதையால் மட்டும் வாழ்வில், முன்னேற்றத்தில் நீங்கள் எதை இழந்தீர்கள்?” என்று கேட்டால் நம் ஒவ்வொருவருடைய புலம்பல்களும் வெவ்வேறாகவேயிருக்கும்.

ரணில் ஆட்சியின் ஆரம்பம் மிக நன்றாக இருக்கவே வெளிநாடுகளுக்குப் போன தமிழர் பலர் தாயகம் திரும்புவதாய் தீர்மானமெடுத்தனர். பலர் பத்திரமாக வந்துபோயினர். ஒருசில வருடங்கள்தான் இப்படிக் கடந்தன. மீண்டும் தொடங்கியது சிங்க வெறியாட்டு. அதன் பிரதானமாக, வடக்கெங்கிலும் வெடிக்கத் தொடங்கியது. இதனால் வெளிநாடுகளிலிருந்து வரவிருந்தவர்களின் சப்த நாடியும் ஒடுங்கிப் போக, அவர்கள்; அங்கேயே உறைந்து போனார்கள். தவிரவும் தமது குடும்பத்தினரைக் கொழும்பிலேயே தங்கவைக்க முடிவும் செய்தார்கள். தலைநகரிலும் உயிருக்கு ஒன்றும் உத்தரவாதமில்லையானாலும் விமானக் குண்டுவீச்சில் சின்னாபின்னமாகி மடியத் தேவையில்லையென்று சிந்தித்திருப்பார்கள் போலும்! ஆனாலும் எட்டப்பர்கள் காட்டிக்கொடுக்க, அரக்கர்களால் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்கிற அச்சம் எத்தனையோ இளைஞர் யுவதிகளை, வாழ்வில் உருப்படியாக ஒன்றும் செய்யவிடாமல் உருக்குலைத்தது. தமிழர்களைக் கைது செய்வதற்காக ஜோடிக்கப்பட்ட பொய்களுடன் தெற்கில் அலைந்து கொண்டிருக்கிற காவல் துறையிடமிருந்தும் கேவலமான பிழைப்பு நடத்துகிற எங்கள் எட்டப்பர்களிடமிருந்தும் தம்மைக் காத்துக்கொள்ள தலைநகரில் தமிழர்கள் எப்போதும் பணம் வைத்துக்கொள்ளவேண்டியிருந்தது.

வெளிநாடுகளின் உச்சபட்ச வெப்பம் அல்லது உறை பனிக்குள் தம்மை வருத்தியபடி உழைத்துக்கொண்டிருந்த எம்மவர்கள் தலநகரில் தங்கியிருந்த தம் உறவுகள் மீது காட்டிய பாசத்தின் உச்சமாய், அவர்களே முன்வந்து தேவைக்கு மிகையாக அனுப்பப்பட்ட அல்லது உறவுகளால் அனுப்பும்படி கோரப்பட்ட பணமே இருந்தது. இது மிகப் பயங்கரமானதோர் பாதையூடாக எம்மவர்களை ஓட்டிச் சென்றது.

ஒரேயடியாகப் பெருந்தொகைப் பணத்தைக் கையிருப்பில் வைத்திருந்த எம்மவர்களில் பெரும்பாலானோர் தடுமாறினர். ஆடம்பரத்தின் அத்தனை கூறுகளையும் கற்க விளைந்தனர். நமக்கென்றிருந்த கலாசாரம், பண்பாடு, ஒழுக்கம், பழக்கவழக்கம் அத்தனையையும் தலைநகரில் தமக்குச் சாதகமான இடங்களில் தொலையவிட்டு நடந்தனர். அதுவே தமது அந்தஸ்து என தமக்குத் தாமே கற்பிதமும் செய்தனர். பணத்தை விசிறியடிக்கப் பழகினர். இவர்கள் வெளிநாட்டுக் காசுவாசிகள் என்று மறைமுகமாகக் குறிப்பிடப்பட்டார்கள். இவர்களால்; கொழும்பில் சிங்கள மற்றும் இந்திய வர்த்தகர்களின் வியாபாரம் களை கட்டத் தொடங்கியது. அரசாங்க வங்கிகள் புதுப் பொலிவு பெற்றதுடன் புதிய பல தனியார் வங்கிகள் உருவாகவும் செய்தன.

மேலும் தமிழர்களிடம் தாராளமாகப் புழங்கிய பணத்தைக் கண்டு, சிறியதும் பெரியதுமாயப் புதிய பல வர்த்தக நிலையங்கள் கடற்கரைத் தோட்டம் பூராவும் முளைக்கத் தொடங்கின. திரும்பிய திசையெங்கிலும் பல வன்னங்களிலும், வண்ணங்களிலும் வர்த்தக நிலையங்கள் சிரித்துக்கொண்டு நின்றன. சந்தையிலும் சந்தடி நிறைந்தது. ஆனாலும் காய், பழம், விற்கிற நடைபாதை வியாபாரிகளைக் கடற்கரைத் தோட்டத்தில் காண முடியாதிருந்தது. சந்தை விலையை விட இவர்களிடம் பேரம் பேசி விலை குறைத்து வாங்கலாம் என்பதால்தான் எங்கிருக்கிற மக்களும் நடைபாதை வியாபாரிகளை விரும்புவதுண்டு. இது எல்லா நாடுகளுக்கும் பொதுவான அம்சம்.
ஆனால் கடற்கரைத் தோட்டக் காசுவாசிகள் விதிவிலக்காய் இருந்தார்கள். பல காலமாக அங்கு வாழ்ந்து வருகிற தமிழர்களைப்போலவே மிகை அல்லது சிறப்பான காய்கறி, பழவகைக் கொள்வனவுக்காக பல் வேறிடங்களுக்குப் போன இவர்கள், நடைபாதைக்குப் பொருத்தமே இல்லாமல், பேரம் பேசாத வியாபாரப் பழக்கமொன்றினைப் புதிதாய் உருவாக்கினார்கள். காசை விசிறியடிப்பதில் வீண் டம்பம் கொண்டிருந்த இவர்களின் போக்கினை அங்கிருந்த வியாபாரிகள் உற்றுக் கவனித்தார்கள்.
தன்னை முடிந்தவரை தாழ்த்தி, ‘மாத்தையா’ அல்லது ‘நோனா’ என்றழைத்துக் குழைந்தபோது எஜமானத்துவத்தில் பெருவிருப்பும் ஜாதி வெறியில் உச்சமும் கொண்டிருந்த எம்மவர்கள் தலை குப்புற விழுந்தார்கள். வெளிநாட்டுக் காசுவாசிகளாகத் தம்மை அவர்களுக்கு இனங்காட்டுவதில் பெருமை கொண்டார்கள். அப்பாவித்தனம் மிகும்படி அவர்கள் காட்டிய வியாபாரப் புன்னகையைப் போலியென்றிவர்கள் உணர்வதற்கு அவகாசம் இருக்கவில்லை. அவனிடம் குசலம் விசாரித்தபடியே அவசர அவசரமாகக் கொள்வனவுகள் நடந்தன.
இதற்கு மொழிச் சிக்கலையும் காரணமொன்றாகக் குறிப்பிட முடிந்தாலும் அது மட்டுமே காரணமென்று கொள்ளமுடியாது. மிதமிஞ்சிய காசுப் புழக்கம் காரணமாக அதை விசிறியடிப்பதில் அநியாயமாகப் பெருமை கொண்டிருந்த இவர்கள் கணக்குப் பார்த்துச் செலவு செய்வதில் பலவீனர்களாகிவிட்டிருந்தனர்.

வெளிநாடுகளில் எத்தனையோ வகையான அழுத்தங்களுக்கு மத்தியில் தம் உறவுகளுக்காகவென்று உருகி உருகி அனுப்பிய பணத்தைத் தலைநகரில் பெறுமதியழக்கச் செய்த, செய்துகொண்டிருக்கிற பெற்றோரை, பிள்ளைகளை, மனைவிமாரை நான் நேரடியாகக் கண்டிருக்கிறேன். தலைநகரின் சொகுசு வீடுகளில் நிதானமாகத் தங்கியிருந்துகொண்டு அவசரமாகச் செலவளித்துக்கொண்டிருந்த இவர்களை, இவர்கள் தவிர்ந்த மற்றெல்லோரும் கவனிக்கவே செய்தனர். இதனால் இவர்களின் கையிருப்புகள் சிங்களவர்களால் பல வடிவங்களில் இலக்கு வைக்கப்பட்டன.
புறக்கோட்டையை அண்டியும் கிருலப்பனை, நுகேகொட போன்ற இடங்களிலும் நடைபாதையில் பத்து ரூபா அல்லது அதற்கும் குறைவாக விற்கப்படுகிற கீரைக்கட்டுக்காக தமிழன் ஆயிரம் ரூபா நோட்டை நீட்டியபோது சிங்களவன் மயங்கி, பின் தெளிந்தான். அதுவரை தன்னியல்பில் வியாபாரம் நடத்திக்கொண்டிருந்த ஒவ்வொரு சிங்கள மூளையையும் தமிழனின் பண விசிறல் புத்துணர்வு பெற வைக்கவே, ஒளிமயமான தமது எதிர்காலத்தை அவர்கள் கடற்கரைத் தோட்டத்தில் கண்டார்கள். தாமதிக்காமல் தமது வியாபாரத்தை தமிழர்கள் விரும்பி நுகரும் பொருட்களுடன் அவ்விடம் நகர்த்தினார்கள்.

விளைவாக, 2001 களுக்குப் பின்னர் காய்கறிகளாலும் பழவகைகளாலும் அலங்கரிக்கப்பட்ட கடற்கரைத் தோட்ட நடைபாதைகளில் தமிழர்கள் ஆனந்தமாக வலம் வந்தனர். இதில் நீங்களும் ஒருவராக இருந்திருக்காவிடினும் குறைந்த பட்சம் இந்தக் கண்கொள்ளா அழகைக் காணவேனும் செய்திருப்பீர்கள். காய்களையும் பழங்களையும் நன்கு குளிப்பாட்டி, ஈரம்போக்கி, பவுடர் பூசி பொட்டும் பூவும் மட்டும் வைக்காத குறையுடன் தமிழரைக் கண்டபோதெல்லாம் ‘மாத்தையா’, ‘நோனா’ என்றழைத்து அவற்றை அழகு காட்டினர். ஏற்கனவே புறக்கோட்டையிலும் கிருலப்பனையிலும் அல்லது பிற இடங்களிலும் கண்ட இந்த வியாபார முகங்களை திடீரென்று தம்முடைய இடத்தில் கண்ட எம்மவர்கள் அங்காந்து மலர்ந்தனர்."உங்களுக்காகவே நாங்கள் இங்கு வந்திறங்கி யிருக்கிறோம்” என்பதாக வியாபாரிகள் தமிழனின் உச்சியில் ஐஸ் வைத்து ஆரம்பித்த நடைபாதை வியாபாரம் நன்கே சூடு பிடித்தது.

ஒரு சில மாதங்கள்தான் கடந்திருக்கும். நாணியும் கோணியும் தமிழர்களுக்கென்றே விற்க வந்த நடைபாதை வியாபாரிகளும் கடற்கரைத் தோட்ட வீடுகளின் உரிமையாளர்களும் இரவு பகலாக றூம் போட்டு யோசித்து, விலைகளை இஸ்டத்துக்கு உயர்த்தினர். அது மற்றெந்த இடத்திலும்; விற்கப்படுகின்ற பொருட்களையோ வாடகை வீடுகளையோ காட்டிலும் குறைந்தது அரை மடங்காவது அதிகமாயிருந்தது.

நாகரிகம் வீறுநடை போட்டது. முஸ்லிம் பெண்களும் கொள்வனவுக்குத் தயாராயினர். “இங்கேயே எல்லாம் வாங்கமுடியும்” என்று முதன் முதலில் வெளியில் வந்த முஸ்லிம் பெண்களை கடற்கரைத் தோட்ட நடைபாதை வியாபாரிகளின் விலைகள் அதிரவைத்தன. கூடவே மாதச் சம்பளத்தை நம்பியிருந்த நம்மவர்களையும் புலம்ப வைத்தது. “ஏன் இவ்வளவு விலை?” என்று கேட்டபோது, வெற்றிலைக் கறை தெரிந்த வியாபாரச் சிரிப்பு மட்டும் பதிலாய் உதிர்ந்தது. ஆனால் இப்போது நாணுவதையும் கோணுவதையும் அவர்கள் சுத்தமாக மறந்து விட்டிருந்தார்கள். தம்மோடு பேரம் பேசாத உறவினை வைத்திருந்த வெளிநாட்டுக் காசுவாசிகளால் அமோகமான வியாபாரம் நடக்குமென்கிற அவர்களின் நம்பிக்கையை காசுவாசிகள் தொடர்ந்து காப்பாற்றினர். ஆக காசுவாசிகளின் ரூட்டே தனியென்றானது.

இதைக் கண்டு பொறுக்காமல் சினங்கொண்ட மாதச் சம்பள தமிழ் உத்தியோகத்தர்களும் காசுவாசிகளை வியாபாரிகள் முன்னிலையிலேயே வைதனர். அல்லது பின்னால் முணுமுணுத்தார்கள். இதிலெதனையும் சட்டை செய்யாத வியாபாரிகளின் இப்போதைய பார்வை, “இஸ்டமென்றால் வாங்கு, இல்லையேல் விலகு” என்று அர்த்தப்படுத்தியது அல்லது மிரட்டியது. நாளடைவில் இதை உரத்துச் சொல்லவும் செய்தார்கள்.

நடைபாதை வியாபாரிகளுக்குப் பிடித்தமான வாடிக்கையாளர்களாகிவிட்ட காசுவாசிகளின் கொள்வனவுப் பாணி பற்றியே தனியொரு கட்டுரை எழுதலாம். எப்போதும் ஏதோ ஓர் அவசரம் தெரிகிற நடை அவர்களுடையது. நடைபாதையில் நிற்க முடியாதளவுக்கு எவ்வளவு மக்கள் குழுமி நின்றாலும் தன் வாடிக்கையாளனான காசுவாசியை வியாபாரி தலைநிமிராமலேயே மோப்பம் பிடிப்பான். “மாத்தையா… மொனவத ஓண?” என்கிற அவனுடைய அதிகபட்ச மரியாதைத் தொனியில் மற்றவர்கள் விலகி காசுவாசிக்கு இடம்கொடுப்பார்கள். தனக்குத் தேவையான பொருட்பட்டியலுடன் காசுவாசி பையையும்; கொடுத்துவிட்டுப் போய்விடுவார். அவசரமாகப் போகிறாராம் என்று அதற்குப் பொருள்.

திரும்பி வரும்போது பொருள் நிரம்பிய பையை வியாபாரி கொடுத்துவிட்டு, ‘இவ்வளவு’ என்பான். அடுத்த கேள்வியில்லாமல் பணத்தைக் கொடுத்துவிட்டு, நிறையில் வெட்டி விலையில் கூட்டித் தனக்குச் செய்யப்பட்ட விசித்திர வியாபாரத்தைக் கையிலோ மோட்டார் சைக்கிளிலோ அல்லது காரிலோ சுமந்துகொண்டு போகிற காசுவாசிகளைக் கண்டு சிங்கள வெற்றிலைப் பல்லன் மனசுக்குள் எப்படியெல்லாம் எள்ளி நகையாடியிருக்கிறான் என்பதை தமிழன் அப்போது உணரவில்லை. இதைக் கண்டால் சிலருக்குக் கோபம் வரும். சிலர் கேலி செய்வார்கள். சிலர் பயந்தார்கள். ஆனால் பலரும் அமைதியாகவே நகர்ந்தார்கள். அவ்வாறு நடந்தவர்களின் மனசுகளில் இவர்கள் பற்றி என்னென்ன தோன்றியதோ! இவ்வாறு நவரச உணர்வுகளும் கலந்து தெறித்த கடற்கரைத் தோட்ட நடைபாதை, 2001 ற்குப் பின்னர் நடக்கவே முடியாத நடைபாதை ஆகியது.

முன்பு வெறிச்சோடிக் கிடந்த தம் இருப்பிடத்தில் இவ்வளவு வசதிகள் வந்தபின்னர், விலையோடு முரண்டு பிடித்தவர்கள் யாரும் வேறெங்கும் கொள்வனவுக்குப் போகவில்லை. வியாபாரி இஸ்டப்பட்டு விதித்த விலைக்குக் கட்டுப்பட்டு எல்லோராலும் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுக் கொண்டிருந்தன. பத்து ரூபா விற்ற கீரை இருபதாகி முப்பதாகி இப்போது ஐம்பது ரூபாவுக்கு விற்கப்படுகிறது. பத்து ரூபாப் பொருளுக்குக் கூட ஆயிரம் ரூபாவை நீட்டினால் அவனுக்குப் பேராசை வருவதில் என்ன தவறிருக்க முடியும்!

2001 ஆம் ஆண்டு கடற்கரைத் தோட்டத்தில் இரண்டு ரூபாவுக்கு விற்ற காட்டுக் கறிவேப்பிலைக் கட்டொன்று அடுத்தகட்டமாக ஐந்து ரூபாவாக உயர்ந்தது. “கறிவேப்பிலைக்கே இந்த விலையா?” என்றவனைக் கேள்வி கேட்காமல், கேட்க முடியாமல் தமிழர்கள் எல்லோரும் வாங்கத்தான் செய்தார்கள். ஏனெனில், “இஸ்டமென்றால் மட்டும் வாங்குங்கள்” என்று ஏற்கனவே எல்லோருக்கும் சொல்லப்பட்டிருக்கிறதே!

காலம் இப்படியெல்லாம் ஓடி, 2007 ஐத் தொட்டது. வெளிநாடுகளில் வேலை செய்துகொண்டிருந்த நம்மவர்களின் வருமானம் மீது அவ்வந்த நாடுகள் கடும்போக்கைக் கடைப்பிடிக்க ஆரம்பித்ததால், இவர்களுக்கு மாதாந்தம் வந்துகொண்டிருந்த பணம் பாதியானது. அல்லது அதையும் விடக் குறைந்தது. இதன் விளைவு எத்தனை சுவாரஸ்யமானதென்று பாருங்கள்.

2007 இல் கடற்கரைத் தோட்டத்தில் கறிவேப்பிலைக் கட்டொன்றின் விலை பத்து ரூபாவானது. என்னே ஆச்சரியம்! காசுவாசிகள் உட்பட யாருமே வாங்கவில்லை. நாறிய மீனைக் கூவி விற்கிறவர்களைப் போல கறிவேப்பிலை வியாபாரிகள் இரண்டு நாட்களாக கறிவேப்பிலைகளைப் பரப்பி வைத்துக் கூவோ கூவென்று கூவிப் பார்த்தார்கள். ம்ஹூம் ....  எவரும் இசையவில்லை.

மூன்றாவது நாள், ஒரு ஞாயிற்றுக் கிழமை, வெளியில் செல்லமுடியாதளவுக்குக் கடுமையாக மழை பெய்து ஓய்ந்தது. மறுநாள் 10 மணியளவில் அலுவலக அவசரத்துடன் கடற்கரைத் தோட்ட நடைபாதையில் நான்…! 

வழமையான காய்கறி அலங்காரங்களுக்குப் பதிலாய் அழுகிப்போன கறிவேப்பிலைகள் குவிந்தும் பரவியும் கிடந்த காட்சியைக் கண்ட மற்றவர்கள் என்ன நினைத்தார்களோ, அவர்களெல்லோருடைய உணர்வுகளின் ஒட்டுமொத்த கலவையாக நான் இருந்தேன். ஒரு சில நிமிடங்களுக்குள் என் முகத்திலும் தான் நவரசங்கள். இறுதியில் எனக்கு ஒன்று மட்டும் தோன்றியது, இதனால் ஒரு மாற்றம் வருமென்று!

பஸ்ஸிற்காக நான் காத்து நின்ற அடுத்த பத்து நிமிடங்களுக்குள் செம்மஞ்சள் நிற மேலங்கி அணிந்த துப்புரவுப் பணியாளர்கள் இத்து இறந்து போய்க் கிடந்த கறிவேப்பிலைகளைக் கூட்டி அள்ளிக்கொண்டு போனபோது என் கண்களில் நீர்: அது தம் இலைகளை அவசரமாகவும் அநியாயமாகவும் இழந்த அந்த மரங்களுக்கானது!

அடுத்த நாள் கறிவேப்பிலையின் விலை பழையபடி ஐந்து ரூபாவுக்கு விற்கப்பட்டதில் எனக்கு ஆச்சரியமில்லை.

தலைநகரிலுள்ள சிங்கள ஊர்ப் பெயரின் தமிழாக்கமே கடற்கரைத் தோட்டம்.

Sunday, January 2, 2011

பிரபஞ்ச இருப்பின் விசித்திரம்

ராஜா மகள்

அடர்ந்து வளர்ந்த காட்டு வழியேகினேன்
“தொடர்ந்து வா” என்று கட்டளை பிறந்தது.

அஞ்சி நடுங்காத பேதையென்னுடன்
கெஞ்சியே வந்தானொரு நோஞ்சான் காளை

திரும்பிடு என்றேன் - நீயும்
வந்திடு என்றான்
என்கடன் இதுவென எத்தனை இயம்பியும்
தன்கடன் அதனைத் தடுப்பது என்றான்

அதற்குன்னை யார் பணித்தார்?
எதற்கிங்கு வருகின்றாய்?
உனக்கென்ன உறவு நான்?

விசுக்கென்று திரும்பி அடுத்த
வினா தொடுப்பதற்குள்
காணாமல் போயிருந்தானந்த
மாயக் கண்ணன்!

தொல்லையொழிந்ததென
துள்ளி நடந்தேன் - காட்டுக்
கள்ளியின் முள்ளொன்று
கையைத் தைக்கையில்
கூட வந்தவனையே
கூவி அழைத்தேன்.

அவனில்லை!
வேறு அரவமுமில்லை!!

குருதி சிந்த நான் நடந்த கொடுமையை
நீங்கள் புரியும்படி விளக்கத் தெரியவில்லை

காட்டுப் பூக்களில் இரண்டினைப் பறித்தென்
காயத்தின் மீது சாறு பிழிந்தேன்
அமிலம் பட்டதாய் எரிச்சல் கண்டது – பின்
அடங்கிப்போயெனைத் தரையில் சாய்த்தது

எத்தனை நிமிடங்கள் இப்படிக் கிடந்தேனோ…
விழித்தபோதென் அருகிருந்து கண்ணன்
அகன்று மறைந்தான்

என் கையிலப்போ வலியுமில்லை
கள்ளி தைத்த முள்ளுமில்லை

எப்படியானது இப்படியென்றும்
என்னவானது எனக்கென்றும்
எழுந்த கேள்விகள்
“அவன் நிஜமா?”
அன்றி
“நான் நிஜமா?”
என்றென்னையே குடைய
விடையறியா துயரோடென்
இலக்கு நோக்கி கால்கள் நடந்தன

“அங்கேயே நில்” என்றிரண்டாவது
கட்டளையென் செவியில் அறைந்தது

ஓ! அண்மித்து விட்டேனோ…?
அடுத்தது என்னவென்றென் மனதில்
அவனுக்காய் போட்ட படம்
அவனெனை நெருங்குவதற்குள்
நிறைவேற வேண்டுமே!

என்னைக் காக்கவென
நான் எடுத்துவந்த ஆயுதம்
வெறுமிரண்டு ரூபா தான்!

ஆனால் அது எடுத்திடப்போவதை
என்னவிலை கொடுத்தும் அவன்
இனிமேல் பெறமாட்டான்

ஏன், என்னினப் பெண்களுக்கு
இனியிவனே காவல்தெய்வம்

அவனது மூன்றாவது ஆணையில்
மூர்க்கம் தெரியவில்லை
உன் நடையும் இடையும் அழகென்று
சிங்களமுரைத்தான்!

குரல் வந்த திசையில் பாய்ந்தவென் விழிகள்
மரத்திலிருந்த அம் மந்தியைக் கண்டது

இலையின் நிறத்தில் சீருடை தரித்து
புலி வருமென்றவன் காவல் இருந்தான்

அவனுக்கு இரையாக
இன்றெனது முறையாம்!

இப்போதெனக்கு வேகமாக …
மிக வேகமாக… வாங்குகிறது மூச்சு!

சிங்கத்தை வெல்லப்போன குட்டி முயலுக்கும்
இப்படித்தான் இருந்திருக்குமோ...?

அதோ…
என்னை முந்திக்கொண்டு அவனிடம்
வேறெவரோ போகிறாரே…
யா…ர…து…?

ஆனால் மந்திக்கு…
என்னைத் தவிர வேறெதுவுமே தெரியவில்லை

மரண பயமேதுமின்றி
மந்தியிருந்த மரத்தை
அண்மித்துவிட்டேன் நான்!

மரத்திலிருந்து இறங்கியது மந்தி
என் கண்கள் மங்கியது
மயங்கிச் சரிவதை நன்கே உணர்ந்தேன்
சொருகிச் செல்லும் கண்களை
மூடவிடாத
என் பிரயத்தனம் பலிக்கவில்லை

முழு மயக்கம் அடைவதற்குள்
இன்றேயென் இறுதியென
அழுததென் மனது!

எண்ணிச் சில நிமிடங்களுக்குள்
இருள் கவிந்து பின்
விடிந்தது எனக்குள்
இறந்து பிறந்ததாய் ஏதோவோர் உணர்வு
மரத்தைப் பார்த்தேன்
அதன் கீழே விழுந்து கிடந்தது மந்தி
அது குருதி வெள்ளத்தில் குளித்துக் கிடந்தது

அதனருகில் ஏதோவொன்று…
சிறிதாய்… மிகச் சிறிதாய்…
அருகில் சென்றேன்
அது… அது…
அதன் ஆண்குறி!
அருகில்…
நான் கொண்டுவந்திருந்த
இரண்டு ரூபா பிளேட்!

நான் மட்டுமின்றியென் இனமும்
இனிமேல் மோட்சம் பெறுமென்ற
நம்பிக்கை ஒளியொன்று
என்னுள்ளொளியாய் மின்னியது

வந்த வழியேகினேன்
எனக்கு முன்னால் நடந்தது
பூனைபோலொரு குட்டி மிருகம்
ஆனால் அது பூனையில்லை!
ஊரின் எல்லைவரை
அது என்கூடவே வந்தது!

Friday, October 3, 2008

பனிக்கட்டியாறு

எனக்கு வசப்படுகிற மொழியினால் உங்களை நிறைக்க இந்த ஆற்றினை ஓடவிடுகிறேன். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு பயணியுடன் அழகிய ஓடமொன்று அதில் மிதந்து வரும். ஓடம் சுமந்துவருகின்ற பயணி சில வேளை நீங்களாகவும் இருக்கக்கூடும். ஆனால், ஆளில்லாமல் வந்தால் அவசரப்பட்டு யாரும் ஏறிவிட வேண்டாம். ஏனெனில், பயணித் தெரிவையும் படகின் போக்கையும் ஆறே தீர்மானிக்கிறது. உருகியோடும் ஆற்றில், மிதந்துசெல்லும் ஓடத்தில் உட்கார்ந்திருக்கும் பயணி உங்களுக்கானவர். ஆற்றின் மருங்குகளில் காத்திருக்கும் உங்களுக்காய், பயணியும் ஓடமும்; பல சுவாரஸ்யங்களை வழங்கிச் செல்லலாம். அழகை ரசிப்பதும் பயனை உணர்வதும் அவரவர் விருப்பம். ஆனால், என்னாற்றுப் பனிக்கட்டிகளை அகழ்ந்து சென்று உங்களுடைய ஆறுகளைக் குளிரவைக்கக்; கூடாது. ஆற்றின் ஓட்டத்திலோ, ஓடத்தின் ஆட்டத்திலோ ஏதேனும் குறை கண்டால் அல்லது கரையோரக் கட்டுகளில் பலவீனம் கண்டால் தயங்காமல் தெரிவியுங்கள்.
“சார், சமீபத்தில நீங்க பார்த்து ரசிச்ச திரைப்படம் எதுன்னு கேக்கிறாங்க” – சுஜாதாவின் அலுவலகத்தினுள் நுழைந்தபோது அங்கு கணினியில் தட்டச்சு செய்துகொண்டிருந்த யுவதியொருவர் சுஜாதாவிடம் கேட்டுக்கொண்டிருந்தார். குமுதத்திற்கான கேள்வி-பதில் பகுதி அது. இன்னொரு யுவதியும் இரண்டு இளைஞர்களும் கூட wஎவ்வேறு வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். விருந்தினர்களுக்காகப் போடப்பட்டிருந்த கதிரையொன்றில் வழமைபோலவே மிடுக்காகக் கூனி அமர்ந்திருந்த சுஜாதா, “ரசிக்கும்படியான படம் எதுவும் சமீபத்தில வரல்ல” என்று பதில் சொன்னார். என்னையும் “வாங்க” என்று தனக்கருகிலிருந்த கதிரையைக் காட்டினார், அவர் வரவேற்ற விதத்தில் எனக்குத் திருப்தி இருக்கவில்லை. என்னுடைய 20 நிமிட நேர தாமதம் காரணமாக இருந்திருக்கலாம். நுங்கம்பாக்கம் சவப்பெட்டிக்கடைக்கு முன்னால் ஆட்டோ மக்கர் பண்ணி நின்றுவிட்டது என்கிற காரணத்தைச் சொல்லத் தோன்றவில்லை. பதிலளிப்பு தொடர்ந்துகொண்டேயிருந்தது. இங்கே தட்டச்சுக்காரி எனக்குச் சந்தர்ப்பம் தரவில்லை என்று நான் சொல்லக்கூடாது. ஆனால், சுஜாதா என்னை சட்டை பண்ணாமல் பதிலளித்துக்கொண்டிருந்தார் எனலாம். அன்று 12 மணிக்கு எனக்குப் பரீட்சை இருந்தது. சுஜாதா குறிப்பிட்ட ஒன்பது மணிக்குச் சரியாகச் சென்றிருந்;தால், “நான் அவசரமாகப் போக வேண்டும், பேட்டியை ஆரம்பிப்போமா” என்று கேட்டுத் தொடங்கியிருக்கலாம். அதுவரை ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருந்த நான், சற்றே அசைந்தேன். கால் மேல் கால் போட்டு வசதியாக உட்காரவும் செய்தேன்: சுஜாதாவைப் போலவே. என்ன நினைத்தாரோ, “நீங்க பேட்டியை ஆரம்பிக்கலாம்” என்றார். என்னுடைய கேள்விகளுக்கும் குமுதக் கேள்விகளுக்கும் மாறி மாறிப் பதில் சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால், நான் கேட்ட மூன்றாவது கேள்விக்கு, அவர் இலக்கியத்தினுள் நுழைந்து பதில்சொல்ல வேண்டியிருந்தது. பல நொடிகள் மௌனித்தார். “எங்கே படிக்கிறீங்க?” என்று கேட்டார். “இந்தக் கேள்வியை விட்டுடுங்க” என்றார். இப்படி நான் கேட்டு அவர் தவிர்த்த கேள்விகள் மூன்று. அவை அவருக்கு மட்டுமே பொருத்தமானதுமான கேள்விகள் என்பதால், வேறெவரிடமும் கேட்கப்படாமல் அவை இன்னமும் என்னுள் இருக்கின்றன. (இதிலிருந்து, சுஜாதாவுக்கு இலக்கிய அறிவு இல்லை என்று நான் சொல்ல வந்ததாய்ப்; பொருள்கொள்ள வேண்டாம்). மிகச் சாதாரணமான, சுவாரஸ்யங்கள் மிகுதிப்பட பதிலளிக்கக்கூடிய, மற்றெவரையும் தாக்கத்தேவையில்லாத அந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்வதொன்றும் சிரமமில்லை என்றுதான் இன்றும் நினைக்கிறேன். ஆனால், ஏன் தவிர்த்தார் என்பதற்குத்தான் காரணம்; தெரியவில்லை. அடுத்துத் தொடர்ந்;த என்னுடைய கேள்விகள் தட்டச்சுக்காரிக்கு தற்காலிகமாக ஓய்வு கொடுத்தன. தவிரவும் அங்கிருந்த இளுசுகளெல்;லாமும் வேலையை நிறுத்தி எம்பக்கம் திரும்பி உட்கார்ந்தனர்.சுமார் 35 நிமிடங்கள் தொடர்ந்த உரையாடலில், பேட்டிக்குத் தேவையற்ற பல சிறந்த நகைச்சுவைகள் இருந்தன. ஆறுபேரும் சேர்ந்து சிரித்ததில் அடுத்த பகுதியாட்கள் அதிர்ந்திருக்கக்கூடும். ஆனால் யாருமே வேடிக்கை பார்க்க வரவில்லை. முடிவில் கேட்டேன், பேட்டி திருப்தியாக இருக்கிறதா என்று. “ரொம்ப நல்லாவே கேட்டிருக்கிறாய். இங்கே பேட்டியெடுக்க வர்றவங்க எப்பிடின்னா, என்னைப்பற்றி என்னையே கேட்டுட்டு ஆரம்பிப்பாங்க. நீ மாறாக இருக்கிறாய். திண்னைக்கு எழுதுற லதா நீ தானா?” என்று கேட்ட சுஜாதாவின் முகத்தில் நிறைந்த மகிழ்ச்சி இருந்தது. “இல்லை, அவங்க சிங்கப்பூரில் இருக்கிற கனகலதா என்றேன். “நீ கதை, கவிதையெல்லாம் கூட எழுதுவாயா? எழுதினா அனுப்பிவை. நான் ப்றூஃப் பாத்து அனுப்பறேன்” என்றார். அவர் என்னை வரவேற்ற முறையில் கண்ட அதிருப்தி, வழியனுப்பிய முறையில்; திருப்தியானது. ஆனால், அந்தப் பேட்டியினைக் காத்திரப்படுத்தியிருக்க வேண்டிய பல கேள்விகளுக்கு சுஜாதா பதில் சொல்லாமல் விட்டது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தினைத் தந்தது. தவிரவும், அவற்றினை ஈடுசெய்யும்படியாக என்னிடமும் கேள்விகளில்லாமல் போனது தவறுதான்!
உருகியோடும்.